Sunday, October 18, 2015

பொல்லாததொரு பெண்பாவம்

அசுரர்களால் புலம்பெயர்க்கப்பட்ட
சீதைகள் சொல்வார்கள்.
'அவர்கள் எம்மைத் தீண்டவில்லை.
கரமைதுனம்தான் செய்துகொண்டிருந்தனர்' என்று.

பாவம்!


யோனிகளுக்குத்தான்
எவ்வளவு பெரிய பூட்டுகள்!

Friday, September 25, 2015

புணர்வின் விருப்பம்

வயலெட் இரவின் வெம்மையில்
வெளியேறி சென்று
கடற்கரையின் கற்கண்டு
 மணற்பரப்பின் மேல் கண்டெடுத்த
ஆணுறையின் மேல் உறுதியாக
கருநீல இரவில் மட்டும் புணர்வேன்
என்று ஓலமிட்டு சென்றான்.
அவை வரப்போவதில்லை என அறிந்தும்.

ஆயினும்

கற்றாழைகளை தன பெண்ணுறுப்பில்
இருத்திக்கொண்ட  அவள் கேட்டாள்!

ஆம்பிளையா இருந்தா வாடா!


Monday, July 7, 2014

அறம் பாடியே கொல்வேன்!

உங்கள் கொலைகள் முரட்டுத்தனமானவை!
நாளங்களறுத்து நிணமும் குருதியும்
கொப்பளிக்கும் கொலைகள்!

சத்தமும் இரத்தமும் தெறிக்கும்
உயிர் பிரிவின் வலி 
கொல்பவனுக்கும் உண்டு!
அதை நான் அறிவேன்!

என் கொலைகள் மிக நுட்பமானவை
மன மாற்றங்களே என் கொலைகள்!
முதலில் இரையின் தலைக்குள் 
பூச்சிகளை புகுத்திவிடுவேன்!

அவை என் இரையை 
அரித்து அரித்துக் கொல்லும்!

சிலசமயங்களில் 
அறமென்னும் அறத்தால்
என் இரைகளை அறுப்பதுண்டு! 
அவைகளுக்கு சமயங்களில் கண்ணீர் வழிவதுண்டு!
குருதிப்பெருக்குகள் அறவே கிடையாது!

என் கொலைகளுக்கு 
எந்த தண்டனையும் கிடையாது!
சிலர் பாராட்டுவார்கள்!
சிலர் காறி உமிழ்வார்கள்!

அப்போது 

பொங்கி வரும் எச்சில் வெள்ளத்தை 
ஆனந்தித்துப் பருகித் திளைப்பேன்!

சமயங்களில் கலம்பகம் பாடுவேன்!
பெரும்பாலும் அறம் பாடியே கொல்வேன்!

Thursday, March 1, 2012

எழுச்சியின் ரகசியம்



'ம்' என்ற ஒற்றை சொல்லுக்கு
ஏறியது அந்தக் கயிற்றுப் பாம்பு
வேகம் பெற்று சீறியது
ஐந்தடி உயர மனிதம் பெற்று


கண்டோர் வியந்தார்
சிலர் காசுகளைப் போட்டனர்
சிலர் சாபங்களை இட்டனர்
சிலர் கயிற்றில் பொதிந்த மர்மம் தேடி
எழுந்தக் கயிற்றை ஆராய்ந்தனர்

மகுடி வாய் கயிற்றின் இழைஇடை
முதலியன நோக்கப்பட்டன.
கயிற்றின் மேல் அவனுக்கு இருந்தக்
காதலைத் தவிர!!! 

Wednesday, February 29, 2012

மதப்பற்று- மதவெறி என்ன வித்தியாசம்?


மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் நூலளவே வித்தியாசம் என்று சொல்வர் சிலர். இரண்டையும் சம்பந்தமே இல்லாத இரு உணர்வுகள் எனக் கூறுவர் சிலர். இரண்டையும் ஒன்றாகவே நிறுத்திப் பார்ப்பர் சிலர். இது மூன்றாமவர்களுக்கான கட்டுரை.

மத உணர்வுகள் என்றென்றும் இந்த உலகில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மனித வரலாறின் வழி நெடுக இது மாறியதில்லை.

மதம் என்பதை ‘கடவுளைச் சார்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு’ எனக் கூறலாம். அதாவது அந்த மதத்தை பின்பற்றுவோர் எல்லாம், கடவுளைக் காரணம் காட்டி இயற்றப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினர்.

கடவுளைக் காரணம் காட்டாத குழுக்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக, சமூக சேவை அமைப்புகள், கட்சிகள், அழுத்தக்குழுக்கள், போராட்டக் குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள், என பல பெயர்களால் இவைகள் அழைக்கப்படுகின்றன.

கடவுள் இல்லை என்பதை நாமெல்லாரும் (அறிவுள்ள மனிதர்களாகிய நாம் எல்லோரும்)  அறிந்திருந்தாலும் கூட, (கடவுள் இருக்கின்றது என்னும் நம்பும் மக்களும் கூட அதை நேரிலே கண்டிராத பட்சத்திலும் கூட), கடவுள் என்ற ஒற்றை விசை மதக்குழுக்களை இதுகாறும் பிழைக்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த கடவுள் என்னும் பெயர்ச்சொல்லால் இந்தக் குழுக்களை (மதங்களை) நிலையாக எதிர்காலத்துக்கும் இழுத்துச் செல்ல, அதாவது பிழைக்கவைக்க முடியாமல் போவது காலத்தின் கட்டாயம்... எல்லாரும் படிக்கிறார்கள், அறிவு கொஞ்சம் வளருகிறது அல்லவா!!

ஆக.. மதங்கள்/மதவாதிகள், தங்களது அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொணர எத்தனிக்கிறார்கள். அதாவது, கடவுள் அற்ற குழுக்களின் சில அணுகுமுறைகளை தம் குழுக்களின் அணுகுமுறையோடு, சேர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, காலம் மாற மாற மதத்தைப் பரப்பும் தளத்தை மாற்றிக்கொள்வது.... (தற்காலத்தில் சமூக வலைதளங்கள்!!), மத உணர்வுகளில் அறிவியல் கலந்திருப்பதாக புருடா விடுவது!!!  இதனால், தமக்கு கிடைக்கப்போவது-அந்த கொஞ்ச நஞ்சம் படித்து யோசிக்க ஆரம்பித்துவிட்ட அந்த மக்கள்- என்ற பேராசையோடு அந்த அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டுவந்தும் விட்டார்கள். 

மதவாதிகளின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு நிறைய பலன்களை தந்தது... தந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சம் படித்த வாலிபர்கள் இந்த மாய வலையால் ஈர்க்கப்பட்டு, இவர்களும் மதம் என்ற நோயை மக்களிடையே பரப்புகிறார்கள். இதில் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் இந்து மற்றும் இஸ்லாம் மத பசங்க தான். முகநூல் தளத்தில் இந்த இரண்டு குழுக்களும் கடவுளைப் பரப்பும் வேகம் மலைக்கவைக்கிறது. ஏன் இந்த வேகம்?? ஏன் இந்த மத உணர்வு?? ஏன் இந்த மத வெறி?? என கேள்வி எழுப்பிக்கொள்வது கட்டாயமாகிறது.

இந்த மாதிரி மதத்தைப் பரப்புபவன் எவனும் கடவுளைக் கண்டதில்லை என்பது உறுதி. என்னதான் அவன் விழுந்து விழுந்து கும்பிட்டாலும், ஒரு எழவும் நடக்கப்போவதில்லை என்பதை நாம் சொன்னாலும் அவன் நம்பப்போவதில்லை.

செத்தவன் ஒருவன் எழுந்து வந்து-இம்மையில் நான் செய்த வழிபாடுகளால் மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தது- என ஒரு நாளும் சொன்னதில்லை. அப்படி எவனாவது சொல்லியிருந்தால் நாம் எல்லோரும் அந்த செத்துப் பிழைத்தவனை குறுக்கு விசாரணை செய்து விட்டு பின் இம்மை, மறுமை போன்ற இழவுகளை நம்பித்தொலைக்கலாம். எவனோ ஒருவன் சொன்னானென்று நம்பும் மக்கள், கண் முன்னால் நடக்கும் அறிவியலை நம்ப மறுக்கிறார்கள்.

மதங்கள் எல்லாமே மக்களைப் பிரிக்கும் கோடுகள் என்பதை உணர்ந்து கொண்டால், மத உணர்வு வேறு, மதப்பற்று வேறு, மத வெறி வேறு என்று எவனும் சொல்லமாட்டான். இந்த மூன்று பதங்களுமே ஒன்றுதான். மதம் என்ற ஒன்று, இந்த மூன்று பதங்களுக்குமே பொதுவாக இருக்கிறது அல்லவே???! அந்த மதம்தான் மனிதர்களைப் பிரிக்கிறது! மனிதர்களைப் பிரிப்பதை விட மோசமான வக்கிரமான செயலை, வேறு எது செய்துவிட முடியும்??? 

மத வெறி என்பது வேற்று மதத்தானை கொல்லும் செயலுக்குக் காரணம்  மட்டுமல்ல. மதத்தை அடிப்படையாகக் காட்டி ஒருவன் செய்யும் தர்மம் கூட மதவெறியே.
கொல வெறியில் ஏசு கிறிஸ்து

வின்சென்ட் ஒரு ஏழை என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ‘குரூப்பில’ சொல்லி உதவி வாங்கித் தரும் ஜோசப்பும், சினிமா நடிகர் ஆர்யா, ஒரு முஸ்லிம் என்பதற்காக, அந்தப் பையனை ஏதோ மார்லன் பிராண்டோவை பாராட்டும் ரேஞ்சுக்கு பாராட்டும் முஸ்லிமும், ஆசிரியையைக் கொன்ற மாணவன் குறிப்பிட்ட மதத்தான் என்பதற்காக (கல்வி அமைப்பு, பெற்றோர் வளர்ப்பு, பாக்கெட் மணி மற்றும் சினிமாக்கள் என்று பல காரணங்கள் இருந்தும் கூட) அந்த ஆசிரியையின் நடத்தையையே  கொச்சைப்படுத்தும் மனிதனும்,  கேப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மத நூலை மேற்கோள் காட்டிப் பேசும் மனிதனும் மதவெறி பிடித்தவனே. பின்ன.... அவனை வேறு என்னவென்று சொல்வது???

மதவெறி பிடித்து ஆயுதம் தாங்கி மற்றொரு மனிதனைக் கொல்கிறானே... அவன் என்ன 24 மணி நேரமுமா ஆயுதத்தைத் தாங்கி கொலை செய்து கொண்டா  இருக்கிறான்?? இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பின்னாளில் மதத்தின் காரணம் கொண்டு கொலை செய்கிறார்கள். கௌரவமான பணியில்/பதவியில் இருப்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்தான். ஆனால் கொலை செய்தவனுக்கு உதவிகள் செய்வார்கள்.


மத உணர்வு என்பதும் மதப் பற்று என்பதும், மத வெறி என்பதன் நீறு பூத்த வடிவங்கள். இது உண்மை எனத் தெரிந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு விவாதிக்க வரும் சில இளங்கன்றுகள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். மதம் சாரா குழுக்களின் அணுகு முறைகளை, மதகுழுக்கள் பயன்படுத்த ஆரம்பித்ததன் விளைவுகளில் ஒன்றுதான்...... மதப்பற்று, மதஉணர்வு மற்றும் மதவெறி ஆகிய மூன்று பதங்களின் அர்த்தங்களும் ஒன்றாகிப் போன விபரீதம்!

அந்தக் கன்றுகளை மதமயமாக்கத்தான் இந்த அணுகுமுறை மாற்றங்களே கொணரப்பட்டன என்பதை அவர்கள் உணரவேண்டும் என இல்லாத அந்தக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
   
   After coming into contact with a religious man I always feel I must wash my hands.
   A casual stroll through the lunatic asylum shows that faith does not prove anything 
                                                                                                -Frederich Nietczhe


மதவாதிகளுடன் ஒவ்வொரு முறை பேசி முடித்தபின்னும், என் கைகளில் கறை படிந்ததாக எண்ணி, என் கைகளைக் கழுவிக்கொள்கிறேன்!

மனநல விடுதிகளின் பக்கம் சற்று நடந்து பார்க்கும்போதுதான் உங்களுக்குப் புரியும்... கடவுள் நம்பிக்கையால் ஒன்றையும் புடுங்க முடியாது என்று!!!
- பிரடெரிக் நீட்ஷே

Tuesday, November 15, 2011

ஈழ விடுதலை- புலிகளின் அணுகுமுறைக் குறைபாடுகள்



பாலஸ்தீனம், தனது சுய ஆட்சிக்காக, தன் இறையாண்மைக்காக ஐக்கிய சபையின் பொதுசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கும் இவ்வேளையில், தெற்கு சூடான் தனியாகப் பிரியும் இவ்வேளையில்,  நம் எல்லோருக்கும் தவிர்க்கவியலாத சிந்தனை ஒன்று எழுகிறது. இது ஏன் ஈழத்திற்கு நடக்கவில்லை- என்ற சிந்தனைதான் அது. இதனை நமக்கு நாமே வினவிக்கொண்டால் வெளிப்படும் உண்மை ரொம்பவும் கறுப்பாக, கசப்பாக உள்ளது.
நாடுகள் விடுதலை பெற, காலனி ஆதிக்கத்திடம் இருந்து மீண்டு கொள்ள, உலகில் நிகழும் விடுதலைப் போராட்டங்களை தீர்க்க ஐக்கிய சபையின் ஒரு அங்கமான TRUSTEESHIP COUNCIL அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில நாடுகள் அந்த கவுன்சிலின் உதவியால் விடுதலையும் பெற்றன. இப்போது அந்த கவுன்சிலின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்த விடுதலைப் போராட்டத்துக்கும் உலக அங்கீகாரம் கிடைப்பது சாத்தியமில்லை, நினைத்தாலும் அது நடக்காது.
விடுதலைப்புலிகள் அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அன்ரன் பாலசிங்கமும் உயிரோடு இருந்தார். உலகெங்கும் உள்ள முன்னேறிய நாடுகளில் தமிழ்ஈழத்திற்கான ஆதரவுமிருந்தது. ஈழம் உருவாக எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடாக இந்தியா மட்டுமிருந்தது. தன் கொல்லைப்புறத்தில் ஐக்கிய சபையின் மற்றும் அமெரிக்காவின் தலை தென்படுவதை விரும்பாததே அதற்கு காரணம். இந்தியாவின் இத்தகைய எதிர்ப்புகளை எளிமையாக கடந்து வந்திருக்க முடியும். உதாரணமாக நேபாளத்தில் ஐக்கிய சபையின் தலையீடு.

குறைந்தபட்சமாக, இந்தியா பரிந்துரைத்த பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தின்படியாவது புலிகள் இலங்கை அரசிடம் அதிகாரப் பகிர்வு செய்து கொண்டிருக்கலாம். அதனையும் புலிகள் மறுதலித்தனர். தனிநாடு என்ற கோரிக்கையில் மிக உறுதியாக இருந்தனர். இது ஒரு பாராட்டத்தக்க நிலை என்றாலும்கூட, தனி ஈழத்திற்கான உலகளாவிய முயற்சிகள் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டன. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெறுமனே, வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டுதலும், ஆயுதங்களை வாங்கிப்போட்டு தாக்குதலுக்கு தயாராவதும் தனிநாடு கோரிக்கைக்கு போதாது அல்லவே?! இதில் கொடுமை என்னவென்றால் அன்று அன்ரன் பாலசிங்கம் கூட சரியான ஆலோசனையைக் கூறவில்லை, சரியான முடிவை எடுக்கவில்லை.      

மேலும் ராஜீவ் கொலையால், தனக்கான ஆதரவை தானே இழந்துகொண்டது புலிகள் அமைப்பு. இந்தியாவில் தமிழ்மக்கள் உட்பட வடக்கிந்தியாவிலும் தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இருந்து வந்தது. அமைதிப்படை செய்த கொடுமைகளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ராஜீவ் கொலைக்கு, அமைதிப்படையின் அட்டூழியங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதனை வேறு சாத்வீகமான முறையில் கையாண்டிருக்கவேண்டும். ‘என்னைக் கொன்றான்!, நான் அவனைக் கொல்வேன்!’ என்பது ஒரு முட்டாள்தனமான வாதம். ஒரு பெரிய இயக்கம், உலகிலேயே மிக Deadlyயான ஒரு கெரில்ல இயக்கம், தனிநாடு கோரும் ஒரு இயக்கம், தன் எல்லா அடிகளையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டாமா?! அதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்திருக்கவேண்டாமா? ராஜீவ் கொலையால் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம். பல நாடுகளில் தடை, இந்தியா உட்பட- நிதிகள் பெறுவதில், ஆயுதங்கள் பெறுவதில் எனப் பலவகையில் தடை! இதில் ஒன்றே ஒன்றைத்தான் புலிகள் பெற்றார்கள். அது பிரபாகரனின் தணிக்கவியலா தன்முனைப்பு தணிந்ததேயாகும். இதனை தன்முனைப்பு என்று அழைப்பதைத்தவிர வேறந்த பெயரிட்டும் அழைக்கமுடியாது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தையாவது புலிகள் ஏற்றிருக்கலாம். தனிநாடு கோரிக்கை என்பது தற்கால உலக அரசியலில் ஒரு செல்லாக்காசு! A demand which has lost its currency! இது இறையாண்மை உள்ள நாடுகளெல்லாம், அதனை சரண்டர் செய்து ஒரு யூனியனாக வாழும் காலம். ஐரோப்பிய யூனியன் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றுமோர் உதாரணம். புலிகள் அதிகாரப்பகிர்வு மூலம் தம் நாட்டிற்குள்ளாகவே அமைதியாக வாழ்ந்திருக்கமுடியும். அதனைப் புலிகள் மறுக்க சொல்லப்பட்ட காரணம், இலங்கை அரசாங்கம் தமது வாழ்வியலைக் குலைக்கும் வாய்ப்பு, அதிகாரப் பகிர்வு அமைப்பில் இருப்பதாகப் புலிகள் கருதியதே! இது ஓரளவிற்கு உண்மை என்றாலும் கூட, ஐக்கிய சபையின் மேற்பார்வையில், அல்லது ஏரியா தாதாவான இந்தியாவின் மேற்பார்வையிலோ அதிகாரப்பகிர்வை உண்மையானப் பகிர்வாக மாற்றியிருக்கலாம். மேலும், தற்கால உலக அரசியலில் அதிகாரப்பகிர்வு ஒரு சிறந்த மாற்றுமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கும் தீங்கு இல்லை. One State, Two governments (Almost)! சீனாவில், இந்தியாவில், கனடாவில் என பல நாடுகளில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒரு முயற்சி.  ஆனால் அந்தோ, நடந்தது என்ன?! இந்த வாய்ப்பு உடனடியாகப் புலிகளால் மறுக்கப்பட்டது.

புலிகள் மற்றுமொரு தவறைச் செய்தார்கள். அது மலையகத்தமிழர்களின் ஆதரவை பெறாதது. மலையகத்தமிழர்கள் தங்களை ஒதுக்கப்பட்டவர்களாகவே நினைத்து ஒதுங்கிவிட்டனர்- அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டனர். இங்கு சில உண்மைகளைக் கூறவேண்டும். தமிழ்நாட்டில் எப்படி சாதிவெறி தலையெடுத்து ஆடுகிறதோ அதற்கு சற்றும் குறையாத, சொல்லப் போனால் சற்று அதிகமாகவே சாதிப் பிரிவினைகள், மற்றும் அதன் கொடுமைகளைக் கொண்டது இலங்கைத்தமிழ் சமூகம். மலையகத்தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்கு பூர்வகுடி/வந்தேறி என்ற பிரிவினைகள் காரணமென்றாலும் சாதியும் ஒரு காரணம். புலிகள் மலையகத்தமிழர்களையும் தம்முடன் இணைத்துப்போராடியிருக்கவேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து புலிகள் மேற்கொண்ட முஸ்லிம் விரட்டியடிப்புக்கு இதுவரை யாரும் தகுந்த காரணங்களைக் கூற முடியவில்லை. ஒரு சுத்தமான இந்து அமைப்பாக புலிகள் அமைப்பு செயல்பட்டது ஜீரணிக்கவியலாதது.

புலிகளின் மற்றுமொரு சறுக்கல் கருணா Factor. இது இலங்கை கருணா மற்றும் தமிழ்நாட்டுக் கருணாநிதி ஆகிய இருவருக்கும் பொருந்தும். தன் சகோதர இயக்கங்களை எல்லாம் வீழ்த்தி ஈழ விடுதலைக்கு தன் இயக்கத்தை தனிப்பெரும் குரலாக மாற்றிக்கொண்ட பிரபாகரன், இயக்கத்துக்குள்ளாகவே எழுந்த துரோகங்களைக் களையெடுத்த பிரபாகரன், கருணா பிரிந்தபோது சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. தனது வழக்கமானக் களையெடுப்பை பிரபாகரன் கையாண்டிருக்கவேண்டும். மாக்கியவல்லியை மறந்துபோனார் பாலசிங்கம். கருணா மூலம் தகவல்களைப் பெற்ற இலங்கை அரசு அதனை மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல் தமிழகக்கருணா! கருணாநிதியைப் பற்றி மூன்றே வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் அவர் ஒரு ‘Credit Hungry Man’.  கருணாநிதியை சரியான விதத்தில் பயன்படுத்தத் தவறிவிட்டனர் புலிகள்.

விடுதலைப் போராட்டம் என்பது கொள்கை ரீதியாகத்தான் நடக்கவேண்டும் என்பதில்லை. தான் கொண்ட கொள்கையிலிருந்து சில சமயங்களில் விலகிச் சென்றுதான் ஆகவேண்டும். ஏனென்றால் விடுதலைப் போராட்டம் தனிமனிதனைச் சார்ந்ததல்ல. அது மக்கள் சார்ந்தது. மக்களின் நன்மையையே முதல் கருத்தாகக் கொண்டு போராளிக்குழு செயல்பட்டாக வேண்டும். புலிகள் மிகப்பிடிவாதமாக இருந்துவிட்டனர்!!

மேற்சொன்ன காரணங்களோடு இன்னும் சிலபல காரணங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலின. பிரபாகரன் நினைத்திருந்தால், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். போரை இல்லாமல் செய்திருக்கலாம்.
சிங்கள இனவெறி அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க முயன்றதும், கொத்தெறி குண்டுகளை வீசி கொலைகள் செய்ததும், மகளிரின் கருவறுக்கும் ஈனச்செயலை செய்ததும், பணக்கார முதலைகளின் முதலீட்டுக்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியங்கள் போரை நடாத்திக்கொடுத்ததும் நேரடிக்காரணங்கள் என்றால் புலிகளின் செயல்பாடுகள் மறைமுகமான காரணங்கள்!
இதோ! புலிகளின் தலைவர் வாழ்ந்த ஆடம்பர பதுங்குகுழிகளைப் பாரீர்! என இலங்கை அரசாங்கம் இன்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது.  இந்திய முதலாளிகள் பணத்தைக் குவித்து தொழில் செய்யத் துவங்கிவிட்டனர். தன்முனைப்புக்குப் பலியான இயக்கம் என புலிகள் இயக்கத்தைப் பற்றி உலக கெரில்லக்கள் கூறுகின்றன.
இவை அனைத்தையும் புலிகள் தவிர்த்திருக்கமுடியும்.
தமிழ் ஈழ விவகாரம், வெறும் உணர்ச்சித்தூண்டலுக்கு மட்டுமே இப்போது பயன்படுத்தப்படுகிறது. உணர்ச்சிவயப்பட்ட சீமான் உள்ளிட்ட சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிக்கின்றன. அவர் இயக்கத்தவர் எல்லோரும் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்’ சின்னத்தை பச்சை குத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமின்றி அறிவுறுத்தப்படுகிறார்கள் போலத்தெரியவருகிறது. எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டு பச்சை குத்திய ர.ர.க்கள் இன்று முழுக்கை சட்டை அணிந்தேயிருக்கிறார்களே!

அறிவுப்பூர்வமாக ஈழப்படுகொலையை அணுகினால், தவறு இருபுறங்களிலுமே இருப்பது தெரிய வரும்! 

Saturday, June 18, 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்-கைப்புள்ள

 

சுப்ரமணியம் சுவாமி என்று ஒரு காமெடி பீஸ் ஒண்ணு நாட்டுல திரிஞ்சிக்கிட்டு இருக்கு. அந்தாள காமெடி பீஸுன்னு மட்டும் நினைச்சிரக்கூடாது. அப்பப்ப அது விஷத்தையும் கக்கும். அதாவது பாம்புன்னும் அடிக்க முடியாது. பழுதுன்னு மிதிக்கவும் முடியாது.அப்பிடிக் கக்குன விஷத்தைப் பத்தித்தான் இந்தக் கட்டுரை.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல அது சொல்லியிருக்கு கம்ப்யூட்டருக்கு ஏத்த பாஷை சமஸ்கிருதம்தானாம்! நாசா விஞ்ஞானிகள் கூட அப்பிடித்தான் சொல்லுறாங்களாம். அந்த புத்தகத்தோட பேரு பரமஹம்ச- த வேதாந்திக் டேல். எழுதினவன் பேரக் கேளுங்களேன்! வாயால சிரிக்க மாட்டீங்க! சுப்ரமோனி அவன் பேரு! நேமாலஜி!!!

இது ஒரு பெல்ட்டு கும்பல்ன்னு இப்ப தெரியுதுல்ல?!

அதுல சூனா சானா சொல்றாரு! அமெரிக்காவுல ‘பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை’ ங்கற தலைப்புல இத உரையாற்றக் கூப்புட்டாங்களாம். நீதான் கடலையே தாண்டக் கூடாதே... உன் இந்து சனாதன தர்மத்தின் படி. நீ ஏன் அங்க போன?  

மேற்கத்திய நாடுகள்ல, இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சிய ‘The Hindu rate of Growth’ அப்படின்னுதான் சொல்லுவாங்க! அதாவது ஒரு நாட்டோட GDP யோட வளர்ச்சி  4%-5% இருந்துதுன்னா அதுக்குப் பேரு இதுதான்! இந்து மதத்தால, இந்தியாவால பொருளாதாரப் பாடத்துலயே ஒரு புது Terminology வந்ததுன்னா பாத்துக்கிடுங்க.   சத்தியமா எனக்குத் தெரிஞ்சி இந்து மதம் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் என எந்த ஈரோப்பியனும் அமெரிக்கனும் மனதால் கூட நினைத்திருக்க மாட்டான்! இந்தாள பின்ன எதுக்கு உரையாற்றக் கூப்பிட்டாங்களாம்?

தெரியல!

அப்பறம் அந்த ஜந்து இன்னொன்னும் சொல்லுது. திராவிடன்-னு ஒரு இனமே இல்லையாம். வெள்ளக்காரன் வந்ததுக்கப்புறம்தான், அவன்தான் அப்படிப் பிரிச்சானாம். அடப்பக்கிப் பயலே! கால்ட் வெல் எழுதுன திராவிட மொழிகள் பத்தினப் புத்தகத்த படிச்சிரிக்கியா நீயி? ஒரு எழவும் தெரியாம எப்பிடித்தான் மைக்கப் புடிச்சி பேசுறானுங்களோ?

அமெரிக்காகாரன் இந்துத்வா மேலயும் இந்து சனாதன தர்மங்கள் மேலயும் ரொம்ப ஈடுபாடு காட்டுறாங்களாம். அதான் உங்க தானைத்தலைவர் மோடிக்கு விசா மறுத்தப்பவே தெரிஞ்சிப் போச்சே! இப்போல்லாம் அமெரிக்கா ஜிகாத் தீவிரவாதிகளைவிட இவன மாதிரிப் பயலுங்க கிட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்காங்க!   அப்படியே ஈடுபாடு காட்டினாலும்தான் என்ன இப்போ? எவனோ நாலு லூசுப் பயலுங்க, கேமரா முன்னாடி துணிய அவுக்கிற ரெண்டு நடிகைங்க  ஆகா ஓகோன்னா அதுக்கு நாங்க ஏன் செவி சாய்க்கணும்?

இந்த விஷப்பூச்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது...மந்திரியாக. மேலிடத்தில் இன்னும் செல்வாக்கோடு உலவுகிறது. இதை என்ன செய்வது? 

மற்ற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நெடியையே தாளவில்லை. இதுல கம்ப்யூட்டர்-ல சமஸ்கிருதமாம். 

இவன் சொல்ற மாதிரி சமஸ்கிருதம் மட்டும் கம்ப்யூட்டர்-ல வந்துட்டா, அன்னைக்கு நான் அதை தொட்டா, அதுக்கு மேல நான் சோத்துக்கைல சோறு திங்க மாட்டேன்யா