Thursday, April 21, 2011

காதல் போயின் சாதல்

காதல்னா என்னாப்பா!

உயிரும் உயிரும் வழியும் பொழுது, வளையல் விரும்பி நொறுங்கும்  பொழுது, வசதியாக வளைந்து கொடுப்பதா? 
அப்டியா?  

இது இல்லன்னா உலகம் சுத்தாதா? 


காதலைப் பற்றி சினிமா எடுத்து, பாட்டு எழுதி, இலக்கியம் படச்சி மக்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கானுங்க இந்த கலை குண்டர்கள்! 

சின்ன வயசு! இளமை ஊஞ்சலாடுது! எதிர்பாலைப் பாத்தா காதல் வரத்தான் செய்யும்! ஆனா அதுதான் காதலா? 

இல்லையா?- பின்ன எதுதான் காதல்? 

எனக்குத் தெரிஞ்சி காதல்னா அது தொடரும் அன்புதான்! வெறும் அன்பு மட்டுமல்ல! இளமையில் காதல் வரலாம். ஆனால் அது முதுமை வரை தொடரும்போதுதான் அது காதல் என அழைக்கப் படவேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் முதுமையில்தான் அது அறியப்படும்.

ஆனா, 

கல்யாணம்-னு ஒரு சடங்க ஏற்படுத்தி, அத விட்டு வெளிய வந்தா சமூகப்புறக்கணிப்புக்கு  ஆளாவாய் என பயமுறுத்தி அதன் மூலமாக தொடருகிறதே குடும்பங்கள் -  அங்கு வாழ்வது காதல் எனக் கொள்ளலாமா? 


இதற்கு யாராவது 'ஆம்' எனக் கூறினால் எப்போதுமே எனக்கு வாயால் சிரிப்பு வருவதில்லை!

இதுக்கு சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிப்பான்கள்.    குடும்பத்தில் வாழ்வது காதல் என நாங்கள் சொன்னால்-அது எப்புடி-நீ வாயைத் தவிர மற்ற துவாரங்களில் சிரிப்பாய் என்று!    

 சட்டம்போட்டு தான் மனிதனின் அடிப்படை உணர்வுகளை இந்த சமூகம் தடுக்கவேண்டியிருக்கிறது நண்பனே! BASIC  INSTINCTS !  அந்த மாதிரி எதுவும் சமூகக் கட்டுப்பாடுகள் இல்லையென்றால் எவனும் ஒரு பொண்டாட்டியோட நிக்க மாட்டான். எவளும் ஒரு புருசனோட வாழமாட்டா!

'கண்டதும் காதல்'- என்ற கருத்து சினிமாக்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.  அனேகமாக இதற்கு முன்னோடி- நமது சிற்றிலக்கியமான 'உலா' வே. உலா வர்ற ராசாவ வேடிக்கப் பாக்க நிக்கற பொண்டுங்க எல்லாம், சூடா பெருமூச்சு வுட்டு, பசல படந்து, கை மெலிஞ்சி, அவங்க கை வளையலே கழண்டு விழுற அளவுக்கு ஆயிட்டாங்க! பக்கத்துல நிக்கற அந்த பொண்ணுங்களோட அம்மாக்கள் தங்களோட ரெண்டு கையையும் தூக்கி உலா வர்ற ராசாவப் பாத்து கும்பிடு போட்டாங்களாம். ஏன்னா.... அந்த அம்மாக்களுக்கும் கை வளையல்கள் கழண்டு விழற மாதிரி ஆயிடிச்சாம். 
வெளியத் தெரிஞ்சாக் கேவலம்ல! அதானாம்! 

நான் சொல்லல சாமி! இலக்கியம் சொல்லுது!

கண்டவுடனே வருவது காமம் மட்டுமே! உடனடியாக தனது சேமிப்பைத் தீர்க்கவேண்டும் என்ற வெறி அது! இது இயற்கைதான். ஆனால் அதற்கு காதல் என்ற பெயர் கொடுத்து அதைப் புனிதப்படுத்தி தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும் செயல்தான் 'கண்டதும் காதல்'.


ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் இணையை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்க முடியுமா?  தினம் ஒரு புதிய முகத்தைக் காட்ட முடியுமா? தினம் ஒரு புதிய திறமையைக் காட்டி  தன் இணையை வியக்கவைக்க முடியுமா? அப்படி முடிந்தால்தான் அந்த இணை தொடரும்- அல்லவா? 

ஒரே இணையுடன் ரொம்பநாள் வாழும்போது, அந்த இணையின் எல்லா விடயங்களும், உடல்மொழிகளும், பிடித்தவை பிடிக்காதவை போன்ற இத்தியாதிகளும், மிகவும் பரிச்சயப்பட்டுப்போகிறது.
இந்த புள்ளி தான் தன் இணை தனக்கு போரடிக்கிறது என்பதை உணரும் புள்ளி. அதையும் மீறி அந்த இணை தொடர வேண்டுமென்றால், உடல் ரீதியான உறவில் வித்தியாசங்கள் வேண்டும். அதையும் மீறி, அந்த இணை தொடரவேண்டும் என்றால், ஒரு அடிநாதமான அன்பு, பிரேமம் வேண்டும். இதைத்தான் நான் காதல் என்கிறேன்! 

ஆனால்,
சமூக வாழ்வில், ஆனால் ஒரு குடும்பம் தொடர எவை எதுவும் அவசியமில்லை.  இணையை ஆச்சர்யப்படுத்த வக்கில்லாத, உடல் உறவில் நாட்டமில்லாத, அத்யந்த அன்பு இல்லாத, ஏராளமான குடும்பங்கள், குடும்பங்களாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
சட்டம்போட்டுத்தான் குடும்பத்தைத் தொடரவேண்டியிருக்கிறது- என நான் கூறியதில் தவறொன்றுமில்லை என இப்போது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன் ! 
 
சமூக விதி ஒன்று இருக்கிறது. கல்யாணம். 

அந்த விதிப்பினை நீ மீறினாயோ----------- என தன் நடுவிரலை மட்டும் நீட்டி எச்சரிக்கிறது சமூகம். விதி விலக்காக விவாகரத்து இருக்கிறது. 

விவாகத்தை ரத்து செய்துவிட்டு வெளியேறும் ஆண்மகனுக்கு ஒரு கட்டத்தில் இன்னொரு இணை கிடைத்துவிடும். அவ்வளவு சீக்கிரம் பெண்ணுக்குக் கிடைத்துவிடுமா என்ன? 

 காதலின் பெயரால் கஷ்டப்படாதீர்கள் மக்களே! வேண்டுமானால் காமம் எனச் சொல்லி பரத்தமை பழகுங்கள்! உங்களை மன்னிக்கிறேன்! 

விதிகளைப் புகுத்துவதால் தொடரும் குடும்பங்கள் எல்லாம் உடைந்து நொறுங்கட்டும்! 

உண்மைக் காதலைப் போற்றுங்கள்! 

Friday, April 1, 2011

கிரிக்கெட்-தேசியவாதமா? மதவாதமா?

(கீற்று இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை. படிக்க சொடுக்கவும்)

இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இன்று சந்தித்தன.

இந்தியாவின் பல தனியார் நிறுவனங்களில் கூட இன்று அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் மதியத்திற்கு மேல் காற்றாடியது. கடந்த இரு தினங்களாக வடக்கிந்திய ஆங்கில ஊடகங்களில், இந்தப் போட்டியைக் குறித்து பல விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியைக் காண்பதற்காக இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் வேண்டி விரும்பி அழைத்திருக்கிறார் இந்தியப் பிரதமர். போட்டியைக் காண வந்த மக்களின் நடுவில் சோனியாவும் அவர் மகன் ராகுல் காந்தியும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள், நடிகைகள் எனப் பலபேர் போட்டியைக் காண வந்திருந்தார்கள். 
வழக்கம் போல நடக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் சுமார் ரூ. 5000  கோடி வரைப் 
புழங்கியதாகத் தகவல்கள் உள்ளன.

ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இந்திய தேசப்பற்றுதான் காரணமா? அப்படி 
தேசியப் பற்று தான் காரணமென்றால் மற்றப் போட்டிகளுக்கும் இவ்வளவு ஆடம்பரங்கள் நிகழ்ந்திருக்கவேண்டுமே? ஏன் நடக்கவில்லை? 
ஏன் என்று சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். 

அதுவே இந்து மதவாதம். பாகிஸ்தானை எதிரி நாடு என்று காண்பதில் தம் 
இந்திய தேசிய உணர்வே இருக்கிறது என்று எண்ணும் இந்து தேசியவாதம். இந்தியர்களின் முஸ்லிம் மத வெறுப்பினை வெளிச்சம் 
போட்டுக்காட்டுவதே இவ்வகையான போட்டிகள்தான் .

பாகிஸ்தானுடன் இரண்டு  பெரிய போர்களையும் ஒரு சிறிய போரையும் இந்தியா சந்தித்திருக்கிறது.

அவ்வப்போது எல்லைக்கோட்டில் சில துப்பாக்கிச் சூடுகளையும் இரு நாடுகளும் நடத்தி வந்தன. பாகிஸ்தான் இந்தியாவின் நேசநாடுகளில் ஒன்று அல்ல. எதிரியே! ஆனால் இந்தியாவுக்குத்தான் திரும்பிய திசையெங்கும் எதிரிகள் உள்ளனரே! பாகிஸ்தானை மதவாத நாடு அல்ல என்று யாரும் சொல்லவில்லை. பாகிஸ்தான் ஒரு Islamic Republic என்பது  அந்நாட்டின் அரசியல் சட்டத்திலேயே உள்ளது. பாகிஸ்தான் தன்னை, மிக நேர்மையுடன் ஒரு முஸ்லிம் நாடு என்றே கூறிக்கொள்கிறது.
மதத்தின் அடிப்படையிலேயே அந்நாடு தோன்றியதை யாரும் மறுக்கவில்லை. 
ஆனால், இந்திய பாகிஸ்தான் மோதல்கள், விளையாட்டுப் போட்டிகளில் கூட, போர்களைப் போலவே சித்தரிக்கப்படுவத்தின் ரகசியம் என்ன?  அப்படிஎன்றால் இந்தியாவும் தன்னை ஒரு இந்து தேசம் எனக் கூறிக்கொள்ள  முடியுமா? இவ்வளவு இந்துப் பாசிச வெறிபிடித்த தேசமும், இந்துவெறி பிடித்த மக்களும் எப்படி தங்களைக் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் Secular Republic என்றுக் கூறிக்கொள்கிறார்கள்?
இந்துவெறி பிடித்த வடக்கிந்திய ஊடகங்கள், அந்த வெறியை மக்களின்பால் ஊட்டி, இந்திய தேசியத்தை இந்து தேசியமாக மாற்றுவதில் எப்படி வெற்றி காண்கிறார்கள்?

இந்திய தேசியவாதத்தின் மாய மழுப்பலில், கரைந்துபோகும், மறக்கப்படும் விஷயங்கள் ஏராளம். திரும்பும் திசையெல்லாம் பிரச்சினைகளைக் கொண்ட இந்தியா, தேசியம் என்ற ஒற்றைப் போர்வையைக் கொண்டு தான்வடிவமைத்த எதிரியைநோக்கி மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புவதற்கே  இந்த தேசியம் பயன்படுகிறது. வேறொன்றுக்கும் பிரயோஜனமில்லை. 

அதனால், இந்தியா மத உணர்வைப் பயன்படுத்தி குளிர்காய்கிறது என்று மட்டும் குற்றம் சாட்டிவிடமுடியாது. வெறும் அரசின் முயற்சிகளாலும் மாயத் தோற்றங்களாலும் மக்களை இந்த அளவுக்கு வெறிபிடிக்கச்செய்ய இயலாது. இந்திய இந்து மக்களுக்கே இயல்பாக தம் இரத்தத்தில்  இந்துப் பாசிச வெறி ஊறிப்போயிருந்தாலொழிய  இது சாத்தியப்படாது. 
இந்த போட்டியைக் கண்டுகொண்டிருந்த என் கன்னட நண்பன் ஒருவனைக் கேட்டேன். 

நான்: "இந்தியா ஜெயிக்குமா, இல்ல பாகிஸ்தான் ஜெயிக்குமா?"
அவன்: " ஏன்றி ஹெலுத்தாயிதீரா! இந்தியாவே win மாடு பேக்கு" 
நான்: "யாக்கு?"
அவன்: "முஸ்லிம் நம்புகே ஆகல்லா! அதுக்கே" 

மிகத்தெளிவாக கூறிவிட்டான் அவன்! 
கடைசியில் இந்தியாவே போட்டியில் வென்றது. ஆனால், அங்கு ஒவ்வொரு பந்துக்கும் ஒலித்த கோஷங்களின் அடிநாதம் இந்து பாசிசவெறியும், முஸ்லிம் மதவெறுப்பும், இந்தியப்போலி தேசியமும்தான் என்பது கண்கூடு. 

இந்திய தேசியத்தின் ஆழம் போகப்போக அதன் அசல் நிறமான காவியே கண்ணுக்குப்படுகிறது.  அது காவியின் நிறமா? இல்லை காய்ந்துபோன ரத்தத்தின் நிறமா என்று வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை.

குறிப்பு:
தேசத்தைத் தாய்க்குச் சமம் என உளறும் தேசியவாதிகளுக்கு ஒன்று சொல்கிறேன். தாய்நாடு என்பது ஒன்றும் தாய்க்குச் சமம் அல்ல. வேணும்னா உன் தாய் பிறந்த நாடுன்னு வேணா சொல்லிக்கலாம். மத்தபடி அது ஒரு இடம். அது தாய்க்கும் சமமல்ல. நாய்க்கும் சமமல்ல.